Friday, 18 October 2013

முல்லைத்தீவில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள்!


முல்லைத்தீவு கொக்கிளாய் கடனீரேரி பிரதேசத்தில் அத்துமீறி கடற்றொழிலில் சிங்கள மீனவர்கள் ஈடுபட்டுவருவதாக தெரிவித்திருக்கும் பிரதேச கடற்றொழிலாளர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் அதிகம் அக்கறை செலுத்தவேண்டும் எனவும் கேட்டிருக்கின்றனர்.
இமேற்படி கடனீரேரி பகுதியில் இலங்கையில் தடைசெய்யப்பட்டிருக்கும் கூட்டுவலை உள்ளிட்ட வலைகளையும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளையும் பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் கடந்த பல வருடங்களாக தொழில் செய்து வருகின்றனர்.

இதனால் இந்தப் பிரதேசத்திற்குள் தமிழ் மீனவர்கள் செல்ல முடியாத நிலைகாணப்படுவதுடன், கடல்வளம் மிக வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை பிரதேச மக்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனை பிரதேசத்திற்கு அழைத்து, சிறிய குல்லா மூலம் கடலுக்குள் ஏற்றிச் சென்று சம்பவத்தை நேரில் காண்பித்துள்ளனர்.

இதன் போது சுமார் 15தொடக்கம் 25குதிரை வலுவுள்ள இயந்திரங்களை பூட்டி கடற்றொழிலில் ஈடுபட்டிருப்பதை அவர் நேரில் பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு தொழிலில் ஈடுபட்டிருந்த சிங்கள மீனவர்களை அருகில் வருமாறு மாகாண சபை உறுப்பினர் அழைத்தபோதும் அவர்கள் அருகில் வராமல் அந்த இடத்திலிருந்து ஓடித்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் ஒருபுறம் பெறுமதிமிக்க விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டுமிருக்கையில், கடல்வளத்தையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் சிங்கள மீனவர்கள் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ் மீனவர்கள், இந்த விடயத்தினை நேரடியாக வடக்கு மாகாணசபை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் விரைந்து இந்தப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் து.ரவிகரனிடம் வலிந்து கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment