Monday, 14 October 2013

திருமலை மாணவர்கள் படுகொலை: சந்தேக நபர்களுக்கு பிணை - கம்பஹா பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு


திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 அதிரடிப்படையினரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த பல்லைக்கழக மாணவர் உட்பட 5 தமிழ் மாணவர்கள், அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இப்படுகொலைச் சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 12 விசேட அதிரடிப்படையினர் கடந்த ஜுலை 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் பிணை மனு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது, 12 சந்தேக நபர்களையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் மேல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தார்.

அத்துடன் சந்தேகநபர்களை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை உள்ள நேரத்தில் சென்று கையொப்பமிடுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கம்பஹா பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

கம்பஹா உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கக் கூடாது எனக் கோரி நடத்திய போராட்டத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கொடிதுவக்கிற்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment