Monday, 14 October 2013

பத்து தினங்களாக எரியும் தீ: அணைக்கும் முயற்சியில் படையினர்



மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் கடந்த பத்து தினங்களாக தீப்பிடித்து எரிந்து வரும் குப்பை மேட்டின் தீயை, பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்கள் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை கொட்டும் பகுதி கடந்த பத்து தினங்களாக தீப் பிடித்து எரிந்து வரும் நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் மற்றும் பொலிசார், விமானப்படையினர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியோரின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் அத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 
தற்போது இந்த தீ அணைக்கும் நடவடிக்கை மும்முரமாக இடம் பெற்றுவருவதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிஹ்ஸ்லி குணசேகர பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் உட்பட மாநகர சபை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

இந்த இடத்தில் மட்டக்களப்பு மாநகர சபை குப்பைகளை கொட்டி திண்மக்கழிவகற்றும் இடமாக முகாமைத்துவம் செய்து வருகின்றது.

இங்கு பிடித்துள்ள தீயினால் அந்த சுற்றுப்புறச் சூழல் மாசடைவதாக இந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.


கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் தீ பிடித்ததாகவும் அந்த தீயை அணைத்தும் அது அணையாமல் விடவே இன்று இந்த பாரிய தீ அணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment