Sunday, 29 September 2013

லண்டனில் நடைபெற்ற இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு!


இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது.
மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான அம்பஸடர் ஹொட்டேலில் இடம்பெற்ற மாநாட்டில், ஆரம்ப நிகழ்வாக இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களுக்காகவுமென பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரினை சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஆரம்பமான மாநாட்டில் சர்வதேச பிரமுகர்களின் உரையும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை புள்ளிவிபரத்துடனும், ஆதார வரை படங்கள், மற்றும் சாட்சியங்களோடும் இளையோரினால் எடுத்துவிளக்கப்பட்டது. இது அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தது.
 
மாநாட்டில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட Francis A Boyle கூறும்போது,

பொஸ்னியாவிலும் செல்பேனிக்காவிலும் நடந்தது இனப்படுகொலை என உலக நீதிமன்றில் வாதிட்டு, இரண்டு வழக்குகளிலும் தான் அவை இனப்படுகொலை என நிரூபித்ததாகவும், அதில் முதலாவது வழக்கு இலட்சக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், ஆனால் செல்பேனிக்காவில் 7000 இளைஞர்கள்தான் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆனபடியால், இனப்படுகொலை என்பது எண்ணிக்கைகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை என்றும், இலங்கைளில் 147,000 பேர் கொல்லப்பட்டிருந்தாலும் சில ஆய்வுகளின்படி 40,000 என்றும் 70,000 என்றும் கணித்திருந்தார்கள். ஆனால் இதில் எண்ணிக்கை முக்கியமல்ல என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

அரசாங்கம் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததா என்பது தான் முக்கியம். ஒரு இனரீதியாகவோ, மதரீதியாகவோ முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இலங்கை அரசாங்கம் நடந்துகொண்டது.  UN article 2 – 2a, 2b, 2c ஆகிய சட்டங்களை மீறியுள்ளார்கள். ஆனபடியால் இது ஒரு இனப்படுகொலை என உறுதியாகிறது. இதனால் தமிழினம் தனக்கென ஆட்சியை அமைக்க உரித்துடையது என்பதை உறுதியுடன் அடித்துக் கூறினார்.

ஆனால் சர்வதேச சமூகம் ஏன் இது ஒரு இனப்படுகொலை என ஏற்க மறுக்கின்றதென்றால், தமிழர்கள் தனிஈழம் பெற உரித்துடையவர்கள் ஆகிவிடுவார்கள் என்பதும், அத்துடன் தமது நாடுகளில் தாங்கள் சிறுபான்மை இனங்களுக்குச் செய்யும் கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவுமே அவர்கள் இலங்கைப் பக்கம் நிற்கிறார்கள் என்றும் கூறினார்.

Robertson கூறுகையில்,

இனப்படுகொலை என்பது ஊடகவியலாளர்களோ அல்லது மற்றவர்களோ சொல்லுவதை வைத்து அதை இனப்படுகொலை எனக் கூறிவிட முடியாது. நீதிமன்றத்தில் நீதிபதி இது ஒரு இனப்படுகொலை என ஏற்க வைக்கவேண்டும்.

அதற்குத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து சிறந்த வழக்கறிஞர்களை அமைத்து அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். அல்லது ஒரு நாடு தமிழர்களுக்காக இலங்கைக்கு எதிராக உலக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முன்வந்தால் இது இலகுவாகச் சாத்தியமாகும்.

உதாரணமாக தமிழ்நாடு தனது அழுத்தத்தை டெல்லி மீது பிரயோகிப்பதன் மூலம் இந்தியா இந்த முயற்சியை எடுக்க வைக்கலாம். Crime against humanity என்பது நிரூபிப்பது சிறிது இலகுவாக இருக்கும். இப்படியான கொடுமைகள் நடந்த நாட்டில் நடக்கும் பொதுநலவாய மகாநாட்டிற்கு பிரித்தானியாவின் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோர் செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்திற்கு உரியதும் எனக்கூறினார்.

Alibodon கூறுகையில்,

ஒரு அமெரிக்க பிரஜை அமெரிக்காவிற்கு வசிக்க வரும்போது அவர் செய்த குற்றத்தை எத்தனை வருடங்கள் சென்று இருந்தாலும் அரசு தரப்புச் சட்டத்தரணிக்கு போதிய ஆதாரங்களுடன் ஒப்படைத்தால் அவர் அதைத் தகுந்த முறையில் ஆராய்ந்து நிரூபிக்கக் கூடியதாக இருந்தால் அவரை நீதிமன்றின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுப்பார்.

இது முக்கியமாக கோத்தபாய போன்றவர்களுக்குப் பொருந்தும் என்று கூறினார். இனப்படுகொலை மட்டுமல்ல கற்பழிப்பு, சித்திரவதை, கட்டாயக் கருஅழித்தல் உலகில் எங்கு செய்திருந்தாலும் அவர் அமெரிக்காவிற்கு வசிக்க வருமிடத்தில், அவருக்கு எதிராக முறையீடு செய்து தண்டனை பெற வைக்கலாம்.

முக்கியமாக அவர் கூறியது சாட்சியங்களை விளம்பரப் படுத்தாமல் இருப்பது சாலச்சிறந்தது என்றும், ஏனெனில் அதற்கெதிராக குற்றவாளி நடவடிக்கை எடுக்கவும் தடயங்களை அழிக்கவும் முற்படுவான் என்று கூறினார்.

Dr. Metha, ஜெனீவாவில் 2009ல் படுமோசமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பின்பு அடுத்தடுத்து 2 தீர்மானங்கள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயமாகும். முற்றும் ஐ.நா தனது இலங்கைக்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதற்கு மனித உரிமை சபை அல்லது பாதுகாப்பு சபை இன் தீர்மானங்களை எதிர்பார்த்து இருக்கிறது. அத்துடன் உலகரீதியாக தமிழ் அகதிகளின் கஸ்டமான நிலைமைகளை எடுத்துக் கூறினார்.

கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரில் பலரும் தமது ஆணித்தரமான சிறந்த கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த மாநாட்டில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனித உரிமை சட்டவியலாளர்கள் திரு. Francis A Boyle, திரு. Alibodon, கனடாவைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி Dr. Metha, இங்கிலாந்தைச் சேர்ந்த சட்டத்தரணி சங்கத்தலைவர் திரு. Harry, Robertson qc ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து உரையாற்றியிருந்தனர்.

இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகளாக அவுஸ்திரேலியாவிலிருந்து திரு. மாணிக்கவாசகர், கேர்மனியிலிருந்து திரு. ராஜேந்திரா, திரு. பரமானந்தம், பிரான்ஸிலிருந்து அமைச்சர் திரு. மகிந்தன், பிரித்தானியா சார்பில் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை முருகதாஸ்,


மற்றும் நா.க.த.அ உறுப்பினர்களான திரு. மணிவண்ணன், திரு. நிமலன், திரு. யோகி, அமைச்சர் திரு. சேகர் மற்றும் தமிழர்களுக்கான மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த திரு. கிருபாகரன் உட்பட பல அமைப்பு பிரதிநிதிகளும், ஈழ விடுதலை உணர்வாளர்களும், குறிப்பாக அதிகளாவான இளையோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மா நாட்டின் இறுதி நாளான இரண்டாவது அமர்வு இன்று அதே மண்டபத்தில் இடம்பெறுகிறது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா