Tuesday, 24 September 2013

உயிர்த்தெழுந்தது தமிழினம்! உறவுகொண்டது கூட்டமைப்பு - கூட்டமைப்பின் யேர்மன் கிளை


வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை முன்னிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யேர்மன் கிளை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாணசபைத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திரு.சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.

முடிந்தது தமிழினத்தின் ஆணிவேர்கள் என்ற முனைப்பில் இலங்கை அரசும் இராணுவமும் ஒட்டுப் புலனாய்வுக் குழுக்களும் நடாத்திவந்த காட்டுத் தார்பார்களுக்கிடையில் தமிழினம் மீண்டும் எழுச்சிபெற்றுள்ளது.

துப்பாக்கிகள் உயர்ந்து நிற்க அதிகார சொற்பேச்சுக்கள் அதிர, ஒட்டுக்குழுக்கள் அடாவடித்தனம் வழங்க அத்தனைக்கும் அப்பால் மக்கள் மசியாது மீண்டெழுந்தனர். எம் தமிழ்ச் சமூகம் உயிர்த்தெழுந்தது.

இலங்கை அரச அதிகாரத்தை உடைத்தெறிந்தது. இத்தனை இருளுக்கும் மத்தியில் ஜனனாயகம் என்றால் என்ன என்பதனை எம் ஈழத் தமிழ் மக்கள் சிறீலங்கா அரசுக்கும் உலகத்திற்கும் எடுத்துக் காட்டியுள்ளனர். மாகாண சபைத் தேர்தல் மூலம் தமிழ் அரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து தம்  உள்ளத்தின் உறுதிதனை புலப்படுத்தியள்ளனர்.

நானே நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கும் நானே ஜனாதிபதி என்னூடாகவே தமிழ் மக்கள் எதையும் பெற்றுக் கொள்ளமுடியும். நான் தமிழ் மக்களுக்கு உரியதைக் கொடுப்பேன் என அருள்வார்த்தை பேசி அடக்குமுறை ஆட்சி செய்து,

தமிழ் மண்ணை சிங்கள மண்ணாக மாற்றும் கபடத்தனத்தை அரங்கேற்றித் தமிழ் மக்களின் சொத்தக்களைச் சூறையாடி, மக்கள் அனைவரையும் இராணுவப் பொறிக்குள் வாழச் செய்து தமிழ் மக்கள் தம் பக்கம் என உலகத்தை ஏமாற்றி பேசிய வீராப்புக்கள் அத்தனையும் ஈழத்தமிழ்மக்களின் உறுதியினால் இன்றோடு குடை சாய்ந்தது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வீரம்மிகுந்த துணிவுடனும் உணர்வுடனும் வாக்களித்த மக்களைப் பாராட்டுகின்றோம். திரு.சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான முப்பது அங்கத்தவர்களையும் நிறைவான மனதுடன் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

தமிழீழம் என்னும் எம் தமிழர் தாயக பூமியை பிரித்து தமிழ் மண்ணை இல்லாதொழிக்கும் முயற்சியில் நீதிமன்றை தங்களுக்குத் துணைக்கிழுத்து சிங்களக் குடியேற்றத்தினைத் தமிழ்ப் பூமி எங்கும் நிறுவி, இராணுவத்தினரின் கோரப்பிடிக்குள் தமிழ் மக்களைச் சிக்கித் தவிக்க வைத்தது சிறீலங்கா அரசு.

அழிந்தனர் விடுதலைப்பலிகள் என்ற மமதையில் அரசும் இராணுவமும் எமது மண்ணின் மக்களையும் எமக்காக உயிர்தந்து விடுதலைக்காகப் போராடிய மக்களையும் அவர் தம் குடும்பங்களையும் பாலியல் வன்முறை கொலை உளரீதியான சிதைப்பு எனக் கொடும்பாதிப்புக்களை அரங்கேற்றி வந்தது.

இச்சூழமைவில் உலக அழுத்தத்துக்குப் பணிந்து வடமாகாண சபைக்கான தேர்தலை அறிவித்தது. நொந்திருந்த மக்கள் விடுதலை பெற ஆவல் கொண்டார்கள். எம்மண் எமக்கு வேண்டும் என்னும் எண்ணம் உயிர்ந்தெழ வெந்த பண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் துப்பாக்கி அடிதடி இராணுவ வெறியாட்டங்கள் வேட்பாளர்களையும் மக்களையும் அச்சுறுத்திநிற்க எழுச்சி கொண்டெழந்தனர் மக்கள்.

சலுகைக்காக அரசு சார்ந்து அடிவருடிகள் மக்களை மோசமாகத் துன்புறுத்தினர். அரசாங்கத்தின் அழகான அறிவிப்புக்கள். எமது வேட்பாளரை நீங்கள் தெரிவு செய்தால் உங்கள் பிரதேசம் மேலும் அபிவிருத்தி செய்யப்படும்.

உங்களுக்கு மேலும் ஒரு யுத்தம் தேவையா எனக் கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள். இறுதி நேரத்தில்  கூட்டணி வாக்காளர்களை சிதைக்கும் எண்ணத்துடன் வீரகேசரி மற்றும் போலி உதயன் பத்திரிகைகளின் வெளியீடுகள். ஆனால் மக்கள் அமைதியாகத் தங்கள் முடிவதனைத் தெரிவித்தார்கள்.

முடிவினை எதிர்பார்த்துக் காத்திருந்தது புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்ல பல நாட்டு அரசுகளும் கூடவே! அச்சுறுத்தல்களுக்கும்  அடக்கு முறைகளுக்கும் எம்தமிழ் மக்கள் அடிபணிவார்களா? அன்றல் தமக்காக மாண்ட உறவின் உயிரில் மீண்டும் உயிர்த்தெழுவார்களா என ஏங்கியிருந்தோம்.

எம்தமிழ் மக்களின் உண்மை மனோநிலைகளை தென் இலங்கை மக்களும் உலகமும் தெரிந்து கொண்டுள்ளன. வடக்கில் வாழும் தமிழர்கள் சிறீலங்கா அரசுக்கும் சர்வதேயத்திற்கும் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பாகத் தங்களை ஆளும் உரிமை தமக்கே உரியது என்னும் உறுதியான செய்தியையும் எதிர்காலத்தில் தங்கள் உரிமைகள் பற்றிய முடிவுகளைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதனையும் 13வது திருத்தச் சட்டமூலம் முழுமையாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது என்பதனையும் இத் தேர்தல் மூலம்  தெரிவித்துள்ளனர்.


தமிழரின் நியாயமான கோரிக்கைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்ற பன்னாட்டு அரசுகள் குறிப்பாக இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என விரும்புகின்றோம். அடுத்த கட்ட விடிவிற்காக ஆவலோடு காத்திருக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா